பாசறையில் பறையறைவித்தல் (7144-7146)
7144. “பூசலே; பிறிது இல்லை ” எனப் புறத்து
ஆசை தோறும் முரசம் அறைந்து என
பாசறைப் பறையின் இடம் பற்றிய
வாசல் தோறும் முறையின் வகுத்திரால்.
1
7145. மற்றும் நின்ற மலையும் மரங்களும்
பற்றி வீசிப் பரவையின் மும்முறை
கற்ற கைகளினால் கடி மாநகர்
சுற்றி நின்ற அகழியைத் தூர்த்திரால்.
2
7146. இடுமின் பல மரம்; எங்கும் இயக்கு அறத்
தடுமின்; “போர்க்கு வருக! ” எனச் சாற்றுமின்;
கடுமின் இப்பொழுதே கதிர்மீச் செலாக்
கொடுமதில் குடுமித் தலைக் கொள்கென்றான்.
3
அகழியை வானரங்கள் தூர்த்தல் (7147-7154)
7147. தடங்கொள் குன்றும் மரங்களும் தாங்கியே
மடங்கல் அன்ன அவ் வானர மாப் படை
இடங்கர்மா இரியப் புனல் ஏறிடத்
தொடங்கி வேலை அகழியைத் தூர்த்ததால்.
4
7148. ஏய வெள்ளம் எழுபதும் எண்கடல்
ஆய வெள்ளத்து அகழியைத் தூர்த்தலும்
தூய வெள்ளம் துணை செய்வது ஆம் என
வாயில் ஊடு புக்கு ஊரை வளைந்ததே.
5
7149. விளையும் வென்றி இராவணன் மெய்ப்புகழ்
முளையினோடும் களைந்து முடிப்ப போல்
தளை அவிழ்ந்த கொழுந் தடந் தாமரை
வளையம் வன்கையில் வாங்கின வானரம்.
6
7150. ஈளி தாரம் இயம்பிய வண்டு உறை
பாளை தாது உகு நீர் நெடும் பண்ணைய
தாள தாமரை அன்னங்கள் தாவிட
வாளை தாவின வானரம் தாவவே.
7
7151. இகழுந் தன்மையன் ஆய இராவணன்
புகழும் மேன்மையும் போயினவாம் என
நிகழும் கள் நெடு நீலம் உகுத்தலால்
அகழிதானும் அழுவது போன்றதே.
8
7152. தண்டு இருந்த பைந் தாமரைத் தாள் அறப்
பண் திரிந்து சிதையப் படர் சிறை
வண்டு இரிந்தன; வாய்தொறும் முட்டையைக்
கொண்டு இரிந்தன அன்னக் குழாம் எலாம்.
9
7153. தூறும் மாமரமும் மலையும் தொடர்
நீறும் நீர்மிசைச் சென்று நெருக்கலால்
ஏறு பேர் அகழின் நின்று இனப் பல
ஆறு சென்றன ஆர்கலி மேல் அரோ.
10
7154. இழுகு மாக் கல் இடுந்தொறும் இடுந்தொறும்
சுழிகள் தோன்றும் சுரித்து; இடை தோன்று தேன்
ஒழுகு தாமரை ஒத்தன ஓங்கு நீர்
முழுகி மீது எழும் மாதர் முகத்தையே.
11
கவிக்கூற்று
7155. தன்மைக்குத் தலையாய தசமுகன்
தொன்மைப் பேர் அகழ் வானரம் தூர்த்ததால்;
இன்மைக்கும் ஒன்று உடைமைக்கும் யாவர்க்கும்
வன்மைக்கும் ஒர் வரம்பும் உண்டு ஆம் கொலோ?
12
வானரங்கள் மதிற்குடுமி கொள்ளுதல்
7156. தூர்த்த வானரம் சுள்ளி பறித்து இடைச்
சீர்த்த பேர் அணை தன்னையும் சிந்தின;
வார்த்தது அன்ன மதிலின் வரம்பு கொண்டு
ஆர்த்த ஆர்கலி காரொடும் அஞ்சவே.
13
மதில்மீது ஏறிய வானரங்களின் தோற்றம்
7157. வட்ட மேரு இது என வான் முகடு
எட்ட நீண்ட மதில்மிசை ஏறி விண்
தொட்ட வானரம் தோன்றின மீத் தொக
விட்ட வெண் கொடி வீங்கின என்னவே.
14
வானரங்கள் ஏறியதால் மதில் தரைபுகுதல்
7158. இறுக்க வேண்டுவது இல்லை; எண் தீர் மணி
வெறுக்கை ஓங்கிய மேரு விழுக்கலால்
நிறுக்க நேர்வரு வீரர் நெருக்கலால்
பொறுக்கலாது மதில் தரை புக்கது ஆல்.
15
அரக்கர் போருக்கு எழுதல்
7159. அறைந்த மா முரசு; ஆனைப் பதாகையால்
மறைந்தவால் நெடு வானகம்; மாதிரம்
குறைந்த தூளி குழுமி; விண் ஊடு புக்கு
உறைந்தது ஆங்கு அவர் போர்க்கு எழும் ஓதையே.
16
அரக்கர் சேனையில் எழுந்த ஒலிகள்
7160. கோடு அலம்பின; கோதை அலம்பின;
ஆடல் அம் பரித் தாரும் அலம்பின;
மாடு அலம்பின மாமணித் தேர் மணி;
பாடு அலம்பின பாய்மத யானையே.
17
அரக்கர் சேனையும் வானர சேனையும் தாக்குதல்
(7161-7169)
7161. அரக்கர் தொல்குலம் வேர் அற அல்லவர்
வருக்கம் யாவையும் வாழ்வு உற வந்தது ஓர்
கருக்கொள் காலம் விதிகொடு காட்டிட
தருக்கி உற்று எதிர் தாக்கின தானையே.
18
7162. பல் கொடும் நெடும் பாதவம் பற்றியும்
கல் கொடும் சென்றது அக்கவியின் கடல்;
வில் கொடும் நெடு வேல் கொடும் வேறு உள
எல் கொடும் படையும் கொண்டது இக்கடல்.
19
7163. அம்பு கற்களை அள்ளின; அம்பு எலாம்
கொம்பு உடைப் பணை கூறு உற நூறின;
வம்பு உடைத் தட மாமரம் மாண்டன
செம்புகர்ச் சுடர் வேல் கணம் செல்லவே.
20
7164. மாக் கை வானர வீரர் மலைந்த கல்
தாக்கி வஞ்சர் தலைகள் தகர்த்தலால்
நாக்கினூடும் செவியினும் நாகம் வாழ்
மூக்கினூடும் சொரிந்தன மூளையே.
21
7165. அற்கள் ஓடும் நிறத்த அரக்கர்தம்
விற்கள் ஓடும் சரம்பட வெம் புண் நீர்
பற்கேளாடும் சொரிதர பற்றிய
கற்கேளாடும் உருண்ட கவிகளே.
22
7166. நின்று மேரு நெடுமதில் நெற்றியின்
வென்றி வானர வீரர் விசைத்த கல்
சென்று தீயவர் ஆர் உயிர் சிந்தின
குன்றின் வீழும் உருமின் குழுவினே.
23
7167. எதிர்த்த வானரம் யாக்கையொடு இற்றன;
மதில் புறம் கண்டு மண்ணில் மறைந்தன;
கதிர்க் கொடுங்கண் அரக்கர் கரங்களால்
விதிர்த்து எறிந்த விலங்கு இலை வேலினே.
24
7168. கடித்த குத்தின கையில் கழுத்து அறப்
பிடித்த வள் உகிரால் பிளவு ஆக்கின
இடித்த எற்றின எண் இல் அரக்கரை
முடித்த வானரம் வெஞ்சின முற்றின.
25
7169. எறிந்தும் எய்தும் எழுமுளைத் தண்டு கொண்டு
அறைந்தும் வெவ் அயில் ஆகத்து அழுத்தியும்
நிறைந்த வெங்கண் அரக்கர் நெருக்கலால்
குறைந்த வானர வீரர் குழுக்களே.
26
போர்க்களக் காட்சி (7170-7173)
7170. செப்பின் செம்புனல் தோய்ந்த செம்பொன் மதில்
துப்பின் செய்தது போன்றது சூழ்வரை;
குப்புற்று ஈர் பிணக் குன்று சுமந்து கொண்டு
உப்பில் சென்றது உதிரத்து ஒழுக்கமே.
27
7171. வந்து இரைத்த பறவை மயங்கின
அந்தரத்தில் நெருங்கலின் அங்கு ஒரு
பந்தர் பெற்றது போன்றது பற்றுதல்
இந்திரற்கும் அரிய இலங்கையே.
28
7172. தங்கு வெங்கனல் ஒத்துத் தயங்கிய
பொங்கு வெங்குருதிப் புனல் செக்கர் முன்
கங்குல் அன்ன கவந்தமும் கை எடுத்து
அங்கும் இங்கும் நின்று ஆடியவாம் அரோ.
29
7173. கொன் நிறக் குருதிக் குடை புட்களின்
தொல் நிறச் சிறையில் துளி தூவலால்
பல் நிறத்த பதாகைப் பரப்பு எலாம்
செந் நிறத்தனவாய் நிறம் தீர்ந்தவே.
30
வானரம் மதிலைவிட்டு இறங்குதல்
7174. பொழிந்த சோரிப் புதுப் புனல் பொங்கி மீ
வழிந்த மாமதில் கைவிட்டு வானரம்
ஒழிந்த மேருவின் உம்பர் புக்கு இம்பரின்
இழிந்த மாக்கடல் என்ன இழிந்ததே.
31
அரக்கர்கள் கோட்டையில் நிரம்புதல்
7175. பதணமும் மதிலும் படை நாஞ்சிலும்
கதன வாயிலும் கட்டும் அட்டாலையும்
முதல யாவையும் புக்குற்று முற்றின
விதன வெங்கண் இராக்கதர் வெள்ளமே.
32
வானரங்களின் அவலநிலை
7176. பாய்ந்த சோரிப் பரவையில் பற்பல
நீந்தி ஏகும் நெருக்கு இடைச் சிற்சில
சாய்ந்து சாய்ந்து சரம்படத் தள்ளல் உற்று
ஓய்ந்து வீழ்ந்த; சிலசில ஓடின.
33
அரக்கரின் ஆர்ப்பு (7177-7178)
7177. தழிய வானர மாக்கடல் சாய்தலும்
பொழியும் வெம்படைப் போர்க்கடல் ஆர்த்ததால்
ஒழியும் காலத்து உலகு ஒரு மூன்றும் ஒத்து
அழியும் மாக்கடல் ஆர்ப்பு எடுத்தனெ்னவே.
34
7178. முரைசும் மா முருடும் முரல் சங்கமும்
செய் காளமும்; ஆகுளி ஓசையும்
விரைசும் பல் இயம் வில் அரவத்தொடும்
திரை செய் வேலைக்கு ஒர் ஆகுலம் செய்தவே.
35
இராவணனது சேனை வாயில் வழி புறப்படுதல்
7179. ஆய காலை. அனைத்து உலகும் தரும்
நாயகன் முகன் நாலின் நடந்து என
மேய சேனை விரிகடல் விண்குலாம்
வாயில் ஊடு புறப்பட்டு வந்ததே.
36
யானைப் படை
7180. நெடிய காவதம் எட்டு நிரம்பிய
படிய வாயில் பருப்பதம் பாய்ந்து என
கொடியொடும் கொடி சுற்றக் கொடுத்த தண்டு
ஒடிய ஊன்றின மும்மத ஓங்கலே.
37
தேர்ப் படை
7181. சூழி யானை மதம்படு தொய்யலின்
ஊழி நாள் நெடுங் கால் என ஓடுவ
பாழி வாழ் வயிரப் படி பல்முறை
பூழி ஆக்கின பொன் நெடுந்தேர்களே.
38
குதிரைப் படை
7182. பிடித்த வானரம் பேர் எழில் தோள்களால்
இடித்த மாமதில் ஆடை இலங்கையாள்
மடுத்த மாக்கடல் வாவும் திரை எலாம்
குடித்துக் கால்வன போன்ற குதிரையே.
39
காலாட் படை
7183. கேள் இல் ஞாலம் கிளர்த்திய தொல்முறை
நாளும் நாளும் நடந்தன நள் இரா
நீளம் எய்தி ஒருசிறை நின்றன
மீளும் மாலையும் போன்றனர் வீரரே.
40
புழுதி எழுதல்
7184. பத்தி வன் தலைப் பாம்பின் பரம் கெட
முத்தி நாட்டின் முகத்தினை முற்றுற
பித்தி பிற்பட வன்திசை பேர்வுற
தொத்தி மீண்டிலவால் நெடுந் தூளியே.
41
குரக்குச் சேனை குலைதல்
7185. நெருக்கி வந்து நிருதர் நெருங்கலால்
குரக்கு இனப் பெருந்தானை குலைந்து போய்
அருக்கன் மாமகன் ஆர் அமர் ஆசையால்
செருக்கி நின்றவன் நின்றுழிச் சென்றதால்.
42
சுக்கிரீவன் சினந்து போர்புரிதல் (7186-7194)
7186. சாய்ந்த தானைத் தளர்வும் சலத்து எதிர்
பாய்ந்த தானைப் பெருமையும் பார்த்து உறக்
காய்ந்த நெஞ்சன் கனல் சொரி கண்ணினன்
ஏய்ந்தது அங்கு ஒர் மராமரம் ஏந்தினான்.
43
7187. வாரணத்து எதிர் வாசியின் நேர் வயத்
தேர் முகத்தினில் சேவகர் மேல் செறுத்து
ஓர் ஒருத்தர்க்கு ஒருவரின் உற்று உயர்
தோரணத்து ஒருவன் எனத் தோன்றினான்.
44
7188. களிறும் மாவும் நிருதரும் கால் அற
ஒளிறும் மாமணித் தேரும் உருட்டி வெங்
குளிறு சோரி ஒழுக கொதித்து இடை
வெளிறு இலா மரமே கொண்டு வீசினான்.
45
7189. அன்ன காலை அரிக்குல வீரரும்
மன்னன் முன்புக வன்கண் அரக்கரும்
முன் உழந்த முழங்கு பெருஞ் செருத்
தன்னில் வந்து தலைமயக் குற்றனர்.
46
7190. கல் துரந்த களம் பட வஞ்சகர்
இற்று உலந்து முடிந்தவர் எண் இலர்;
வில் துரந்தன வெங்கணையால் உடல்
அற்று உலந்த குரங்கும் அனந்தமே.
47
7191. கற்கள் தந்து நிமிர்ந்து கடுஞ்செரு
மற்கடங்கள் வலிந்து மலைந்திட
தற்கு அடங்கி உலந்தவர்தம் உயிர்
தறெ்கு அடங்க நிறைந்து செறிந்தவால்.
48
7192. பாடுகின்றன பேய்க் கணம் பல விதத்து
ஆடுகின்ற அறுகுறை; ஆழ் கடற்கு
ஓடுகின்ற உதிரம் புகுந்து உடல்
நாடுகின்றனர் கற்புடை நங்கைமார்.
49
7193. யானை பட்ட அழிபுனல் யாறு எலாம்
பானல் பட்ட; பலகணை மாரியின்
சோனை பட்டது; சொல் அரும் வானரச்
சேனை பட்டது; பட்டது செம்புண் நீர்.
50
7194. காய்ந்த வானர வீரர் கரத்தினால்
தேய்ந்த ஆயுளர் ஆனவர் செம்புண் நீர்
பாய்ந்தது; ஆனைப் படுகளம் பாழ்படச்
சாய்ந்ததால் நிருதக் கடல் தானையே.
51
வச்சிரமுட்டி வந்து பொருதல் (7195-7196)
7195. தங்கள் மாப்படை சாய்தலும் தீ எழ
வெங்கண் வாள் அரக்கன் விரை தேரினை
கங்கசாலம் தொடரக் கடல் செலூஉம்
வங்கம் ஆம் என வந்து எதிர் தாக்கினான்.
52
7196. வந்து தாக்கி வடிக்கணை மா மழை
சிந்தி வானரச் சேனை சிதைத்தலும்
இந்திரர் ஆதியரும் திகைத்து ஏங்கினார்;
நொந்து சூரியன் கான்முளை நோக்கினான்.
53
சுக்கிரீவன் வச்சிரமுட்டியைத் தொலைத்தல்
7197. நோக்கி வஞ்சன் நொறில் வய மாப்பரி
வீக்கு தேரினின் மீது எழப் பாய்ந்து தோள்
தூக்கு தூணியும் வில்லும் தொலைத்து அவன்
யாக்கையும் சிதைத்திட்டு எழுந்து ஏகினான்.
54
அரக்கர் ஓட்டம் கண்டு வானரர் ஆர்த்தல்
7198. மலை குலைந்தனெ வச்சிரமுட்டி தன்
நிலை குலைந்து விழுதலின் நின்றுளார்
குலை குலைந்து கொடி நகர் நோக்கினார்;
அலை கிளர்ந்தனெ வானரம் ஆர்த்தவே.
55
கீழை வாயிலில் போர்
7199. வீழி வெங்கண் இராக்கதர் வெம்படை
ஊழி ஆழி கிளர்ந்தனெ ஓங்கின
கீழை வாயிலில் கிட்டலும் முட்டினர்
சூழும் வானர வீரர் துவன்றியே.
56
வானரர் அழிவு
7200. சூலம் வாள் அயில் தோமரம் சக்கரம்
வாலம் வாளி மழையின் வழங்கியே
ஆலம் அன்ன அரக்கர் அடர்த்தலும்
காலும் வாலும் துமிந்த கவிக்குலம்.
57
அரக்கர் அழிவு (7201-7202)
7201. வென்றி வானர வீரர் விசைத்து எறி
குன்றும் மா மரமும் கொடுங்காலனில்
சென்று வீழ நிருதர்கள் சிந்தினார்;
பொன்றி வீழ்ந்த புரவியும் பூட்கையும்.
58
7202. தண்டு வாள் அயில் சக்கரம் சாயகம்
கொண்டு சீறி நிருதர் கொதித்து எழ
புண் திறந்து குருதி பொழிந்து உக
மண்டி ஓடினர் வானர வீரரே.
59
நீலன் நிகழ்த்திய போர் (7203-7204)
7203. எரியின் மைந்தன் இருநிலம் கீழுற
விரிய நின்ற மராமரம் வேரொடும்
திரிய வாங்கி நிருதர் வெஞ்சேனை போய்
நெரிய ஊழி நெருப்பு என வீசினான்.
60
7204. தேரும் பாகரும் வாசியும் செம்முகக்
காரும் யாளியும் சீயமும் காண்தகு
பாரின் வீழப் புடைப்ப பசும்புணின்
நீரும் வாரி அதனை நிறைத்ததே.
61
அரக்கர் தலைவன் கும்பானுவின் போர்
7205. அரக்கர் சேனை அடுகளம் பாழ்பட
வெருக் கொண்டு ஓடிட வெம்படை காவலன்
நெருக்க நேர்ந்து கும்பானு நெடுஞ்சரம்
துரக்க வானரச் சேனை துணிந்ததே.
62
இடும்பன் கடும்போர் (7206-7210)
7206. கண்டு நின்ற கரடியின் காவலன்
எண் திசாமுகம் ஏங்கும் இடும்பன் ஓர்
சண்ட மாருதம் என்னத் தடவரை
கொண்டு சீறி அவன் எதிர் குப்புறா.
63
7207. தொடுத்த வாளிகள் வீழுமுன் சூழ்ந்து எதிர்
எடுத்த குன்றை இடும்பன் எறிதலும்
ஒடித்த வில்லும் இரதமும் ஒல்லெனப்
படுத்த வாசியும் பாகனும் பாழ்பட.
64
7208. தேர் அழிந்து சிலையும் அழிந்து உகக்
கார் இழிந்த உரும் எனக் காய்ந்து எதிர்
பார் கிழிந்து உகப் பாய்ந்தனன் வானவர்
போர் கிழிந்து புறம்தரப் போர் செய்தான்.
65
7209. தத்தி மார்பின் வயிரத் தடக்கையால்
குத்தி நின்ற கும்பானுவை தான் எதிர்
மொத்தி நின்று முடித்தலை கீழ் உற
பத்தி வன் தடந்தோள் உறப் பற்றுவான்.
66
7210. கடித் தலத்து இருகால் உறக் கைகளால்
பிடித்துத் தோளைப் பிறங்கலின் கோடு நேர்
முடித்தலத்தினைக் கவ்வுற மூளைகள்
வெடித்து வீழ்தர வீழ்த்தினன் ஆம் அரோ.
67
பிரகத்தன் போர் (7211-7212)
7211. தன் படைத்தலைவன் படத் தன் எதிர்
துன்பு அடைத்த மனத்தன் சுமாலி சேய்
முன் படைத்த முகில் அன்ன காட்சியான்
வன்பு அடைத்த வரிசிலை வாங்கினான்.
68
7212. வாங்கி வார்சிலை வானர மாப்படை
ஏங்க நாண் எறிந்திட்டு இடையீடு இன்றித்
தூங்கு மாரி எனச் சுடர்வாளிகள்
வீங்கு தோளினன் விட்டனன் ஆம் அரோ.
69
பிரகத்தனும் நீலனும் (7213-7220)
7213. நூறும் ஆயிரமும் கணை நொய்தினின்
வேறு வேறு படுதலின் வெம்பியே
ஈறு இல் வானர மாப்படை எங்கணும்
பாற நீலன் வெகுண்டு எதிர் பார்ப்பு உறா.
70
7214. குன்றம் நின்றது எடுத்து எதிர் கூற்று எனச்
சென்று எறிந்து அவன் சேனை சிதைத்தலும்
வென்றி வில்லன் விடுகணை மாரியால்
ஒன்று நூறு உதிர் உற்றது அக் குன்றமே.
71
7215. மீட்டும் அங்கு ஓர் மராமரம் வேரொடும்
ஈட்டி வானத்து இடி என எற்றலும்
கோட்டு வில்லும் கொடியும் வயப்பரி
பூட்டு தேரும் பொடித்துகள் ஆயவே.
72
7216. தேர் இழந்து சிலையும் இழந்திட
கார் இழிந்த உரும் எனக் காந்துவான்
பார் இழிந்து பருவலித் தண்டொடும்
ஊர் இழந்த கதிர் என ஓடினான்.
73
7217. வாய் மடித்து அழல் கண்தொறும் வந்து உக
போய் அடுத்தலும் நீலன் புகைந்து எதிர்
தாய் அடுத்தவன் தன்கையில் தண்டொடும்
மீ எடுத்து விசும்பு உற வீசினான்.
74
7218. அம்பரத்து எறிந்து ஆர்ப்ப அரக்கனும்
இம்பர் உற்று எரியின் திரு மைந்தன் மேல்
செம்புனல் பொழியக் கதை சேர்த்தினான்
உம்பர் தத்தமது உள்ளம் நடுங்கவே.
75
7219. அடித்தலோடும் அதற்கு இளையாது அவன்
எடுத்த தண்டைப் பறித்து எறியா ‘இகல்
முடித்தும் ‘என்று ஒரு கை கொடு மோதினான்
குடித்து உமிழ்ந்து எனக் கக்கக் குருதியே.
76
7220. குருதி வாய்நின்று ஒழுகவும் கூசலன்
நிருதன் நீலன் நெடுவரை மார்பினில்
கருதலாத முன் குத்தலும் கைத்து அவர்
பொருத பூசல் புகல ஒண்ணாததே.
77
பிரகத்தன் இறந்து வீழ்தல்
7221. மற்று நீலன் அரக்கனை மாடு உறச்
சுற்றி வால்கொடு தோளினும் மார்பினும்
நெற்றி மேலும் நெடுங்கரத்து எற்றலும்
இற்று மால் வரை என்ன விழுந்தனன்.
78
அமரர் ஆர்ப்பும் அரக்கர் தோற்பும்
7222. ‘இறந்து வீழ்ந்தனனே பிரகத்தன் ‘என்று
அறிந்த வானவர் ஆவலம் கொட்டினார்;
வெறிந்த செம்மயிர் வெள் எயிற்று ஆடவர்
முறிந்து தத்தம் முதுநகர் எய்தினார்.
79
தறெ்கு வாயிலில் அங்கதன் போர்
7223. தறெ்கு வாயிலில் சென்ற நிசாசரர்
மல் குலாவு வயப் புயத்து அங்கதன்
நிற்கவே எதிர் நின்றிலர் ஓடினார்
பொன் குலாவு சுபாரிசன் பொன்றவே.
80
மேலைவாயிலில் அனுமன் போர்
7224. நூற்று இரண்டு எனும் வெள்ளமும் நோன் கழல்
ஆற்றல் சால் துன்முகனும் அங்கு ஆர்த்து எழ
மேல் திண்வாயிலில் மேவினர் வீடினார்
காற்றின் மாமகன் கை எனும் காலனால்.
81
நாற்றிசை வாயில்களிலும் நடந்த போரைப்பற்றித் தூதுவர் இராவணனுக்குச் சொல்லுதல்
7225. அன்ன காலையில் அந்த அந்த வாயிலில்
துன்னு போர் கண்ட தூதுவர் ஓடினார்
‘மன்ன! கேள் ‘என வந்து வணங்கினார்
சென்னி தாழ்க்கச் செவியிடைச் செப்பினார்.
82
கீழைவாயில் தூதுவர் கூறியது
7226. கீழை வாயில் கிளர் நிருதர் படை
ஊழி நாளினும் வெற்றி கொண்டு உற்ற நின்
ஆழி அன்ன அனீகத் தலைமகன்
பூழியான்; உயிர் புக்கது விண் என்றார்.
83
தனெ்திசைவாயில் தூதுவர் சொல்வது
7227. ‘வென்றி வேல் கை நிருதர் வெகுண்டு எழ
தனெ்திசைப் பெரும் வாயிலில் சேர்ந்துழி
பொன்றினான் அச் சுபாரிசன்; போயினார்
இன்று போன இடம் அறியோம் ‘என்றார்.
84
வடக்கு, மேற்கு வாயிலோர் கூற்று
7228. ‘வடக்கு வாயிலில் வச்சிர முட்டியும்
குடக்கு வாயிலில் துன்முகக் குன்றமும்
அடக்கரும் வலத்து ஐம்பது வெள்ளமும்
படச் சிதைந்தது நம்படை ‘என்றனர்.
85
கேட்ட இராவணன் சினத்தல்
7229. என்ற வார்த்தை எரி உகும் நெய் எனச்
சென்று சிந்தை புகுதலும் சீற்றத் தீ
கன்று கண்ணின் வழிச் சுடர் கான்றிட
நின்று நின்று நெடிது உயிர்த்தான் அரோ.
86
இராவணன் கேள்விக்குத் தூதுவர் விடை
கூறுதல் (7230-7232)
7230. மறித்தும் ‘ஆர் அவன் ஆர் உயிர் வவ்வினார்?
இறுத்துக் கூறும் ‘என்றான்; இசை எங்கணும்
நிறுத்தும் நீலன் நெடும் பெருஞ் சேனையை
ஒறுத்து மற்று அவனோடும் வந்து உற்றனன்.
87
7231. உற்ற போதின் இருவரும் ஒன்று அல
கற்ற போர்கள் எலாம் செய்த காலையில்
நெற்றி மேல் மற்ற அந் நீலன் நெடுங்கையால்
எற்ற வீந்தனன் என்ன இயம்பினார்.
88
7232. அன்னவன்னொடும் போன அரக்கரில்
நல் நகர்க்கு வந்தோம் ஐய! நாங்களே
என்ன என்ன எயிற்று இகல் வாய்களைத்
தின்னத் தின்ன எரிந்தன திக்கு எலாம்.
89
தூதுவர் கூறியதை இராவணன் சினத்தால்
மீட்டும் கூறுதல்
7233. மாடு நின்ற நிருதரை வன்கணான்
ஓட நோக்கி ‘உயர்படையான் மற்று அக்
கோடு கொண்டு பொருத குரங்கினால்
வீடினான்! ‘என்று மீட்டும் விளம்பினான்.
90
இராவணன் தனக்குள் சொல்வது (7234-7236)
7234. “கட்டது இந்திரன் வாழ்வை; கடைமுறை
பட்டது இங்கு ஓர் குரங்கு படுக்க “ என்று
இட்ட வெஞ்சொல் எரியினில் என் செவி
சுட்டது; என் உடை நெஞ்சையும் சுட்டதால்;
91
7235. ‘கருப்பை போல் குரங்கு எற்ற கதிர் சுழல்
பொருப்பை ஒப்பவன் தான் இன்று பொன்றினான்;
அருப்பம் என்று பகையையும் ஆர் அழல்
நெருப்பையும் இகழ்ந்தால் அது நீதியோ?
92
7236. ‘நிற்க அன்னது நீர்நிறை கண்ணினார்
வற்கம் ஆயின மாப் படை ஓடும் சென்று
ஒற்கம் வந்து உதவாமல் உறுக என
வில் கொள் வெம்படை வீரரை ஏவினான்.
93
இராவணன் தேர் ஏறுதல்
7237. மண்டுகின்ற செருவின் வழக்கு எலாம்
கண்டு நின்று கயிலை இடந்தவன்
புண் திறந்தன கண்ணினன் பொங்கினான்
திண்திறல் நெடுந்தேர் தரெிந்து ஏறினான்
94
தேரின் சிறப்பு
7238. ஆயிரம் பரிபூண்டது; அதிர் குரல்
மா இரும் கடல் போன்றது; வானவர்
தேயம் எங்கும் திரிந்தது; திண்திறல்
சாய இந்திரனே பண்டு தந்தது.
95
நாணொலி செய்தல்
7239. ஏற்றி எண்ணி இறைஞ்சி இடக்கையால்
ஆற்றினான் தன் அடுசிலை அன்னதின்
மாற்றம் என் நெடு நாண் ஒலி வைத்தலும்
கூற்றினாரையும் ஆருயிர் கொள்வதே.
96
இராவணன் போர்க் கோலம்
7240. மற்றும் வான்படை வானவர் மார்பிடை
இற்று இலாதன எண்ணும் இலாதன
பற்றினான்; கவசம் படர் மார்பிடைச்
சுற்றினான்; நெடுந் தும்பையும் சூடினான்.
97
முத்துக்குடைக்கீழ் கவரிவீச இராவணன் இருத்தல்
7241. பேரும் கற்றைக் கவரிப் பெருங்கடல்
நீரும் நீர் நுரையும் என நின்றவன்
ஊரும் வெண்மை உவாமதிக் கீழ் உயர்
காரும் ஒத்தனன் முத்தின் கவிகையான்.
98
முரசு முதலியன முழங்கல் (7242-7243)
7242. போர்த்த சங்கப் படகம் புடைத்திட
சீர்த்த சங்கக் கடல் உக தேவர்கள்
வேர்த்து அசங்க விசும்பு வெடித்திட
ஆர்த்த சங்கம் அறைந்த முரசமே.
99
7243. தேரும் மாவும் படைஞரும் தறெ்றிட
மூரி வல் நெடுந் தானையின் முற்றினான்;
நீர் ஒர் ஏழும் முடிவில் நெருக்கும் நாள்.
மேரு மால்வரை என்ன விளங்கினான்.
100
வீணைக்கொடி விண்ணில் பறத்தல்
7244. ஏழ் இசைக் கருவி வீற்றிருந்தது என்னினும்
சூழ் இருந் திசைகளைத் துடக்கும் தொல்கொடி
வாழிய உலகு எலாம் வளைந்து வாய் இடும்
ஊழியின் அந்தகன் நாவின் ஓங்கவே.
101
தேவர்கள் கலங்குதல்
7245. வேணு உயர் நெடுவரை அரக்கர் வேலைக்கு ஓர்
தோணி பெற்றனர் அது கடக்கும் தொல்செருக்
காணிய வந்தவர் கலக்கம் கைம் மிகச்
சேண் உயர் விசும்பிடை அமரர் சிந்தவே.
102
இராவணன் கண்ணில் தோன்றிய புகையின் சிறப்பு
7246. கண் உறு கரும்புகை கதுவ கார் நிறத்து
அண்ணல் வாள் அரக்கர்தம் அரத்தப் பங்கிகள்
வெண்நிறம் கோடலின் உருவின் வேற்றுமை
நண்ணினர் நோக்கவும் அயிர்ப்பு நல்கவே.
103
கொடிகள்
7247. கால் நெடுந் தேர் உயர் கதலியும் கரத்து
ஏனையர் ஏந்திய பதாகை ஈட்டமும்
ஆனையின் கொடிகளும் அளவித் தோய்தலால்
வான யாறொடு மழை ஒற்றி வற்றவே.
104
சேமத் தேர்
7248. ஆயிரம் கோடி பேய் அங்கை ஆயுதம்
தூயன சுமந்து பின்தொடர சுற்று ஒளிர்
சேயிரு மணி நெடுஞ் சேமத் தேர் தரெிந்து
ஏயின ஆயிரத்து இரட்டி எய்தவே;
105
இராவணன் போர்க்களத்தில் தோன்றுதல்
7249. ஊன்றிய பெரும்படை உலைய உற்று உடன்
ஆன்ற போர் அரக்கர்கள் நெருங்கி ஆர்த்து எழ
தோன்றினன் உலகு எனத் தொடர்ந்து நின்றன
மூன்றையும் கடந்து ஒரு வெற்றி முற்றினான்.
106
இராவணன் வந்ததை இராமனுக்கு ஒற்றர் அறிவித்தல்
7250. ஓது உறு கருங்கடற்கு ஒத்த தானையான்
தீது உறு சிறுதொழில் அரக்கன் சீற்றத்தான்
போதுறு பெருங்களம் புகுந்துளான் எனத்
தூதுவர் நாயகற்கு அறியச் சொல்லினார்.
107
அதுகேட்டு இராமன் தோள் பூரித்தல்
7251. ஆங்கு அவன் அமர்த் தொழிற்கு அணுகினான் என
‘வாங்கினன் சீதையை ‘என்னும் வன்மையால்
தீங்கு உறு பிரிவினால் தேய்ந்த தேய்வு அற
வீங்கின இராகவன் வீரத் தோள்களே.
108
இராமன் போர்க் கோலம்
7252. தொடை உறு வற்கலை ஆடை சுற்றி மேல்
புடை உறு வயிர வாள் பொலிய வீக்கினான்
இடை உறு கருமத்தின் எல்லை கண்டவர்
கடை உறு நோக்கினின் காணும் காட்சியான்.
109
காலில் கழல் கட்டியது
7253. ஒத்து உறு சிறு குறள் பாதம் உற்ற நாள்
வித்தக அருமறை உவகை மிக்கு மேல்
பத்து உள விரல் புடை பரந்த பண்பு எனச்
சித்திரச் சேவடிக் கழலும் சேர்த்தினான்.
110
மார்பில் கவசமணிந்தது
7254. பூ இயல் மீன் எலாம் பூத்த வான் நிகர்
மேவு இரும் கவசம் இட்டு இறுக்கி வீக்கினன்
தேவியைத் திருமறு மார்பில் தீர்தலால்
நோவு இலள் என்பது நோக்கினான் கொலோ.
111
முன்கையில் உறையணிந்தது
7255. நல்புறக் கோதை தன் நளினச் செங்கையில்
நிற்பு உற சுற்றிய காட்சி நேமியான்
கற்பகக் கொம்பினைக் கரிய மாசுணம்
பொற்புறத் தழுவிய தன்மை போன்றதால்.
112
விரலில் உறையணிந்தது
7256. புதை இருள் பொழுதினும் மலரும் பொங்கு ஒளி
சிதைவு அருநாள் அலர்ச் சிவந்த தாமரை
இதழ் தொறும் வண்டு வீற்று இருந்தது ஆம் எனத்
ததைவுறு நிரை விரல் புட்டில் தாங்கினான்.
113
தூணியைத் தோளில் கட்டியது
7257. பல் இயல் உலகு உறு பாடை பாடு அமைந்து
எல்லை இல் நூல் கடல் ஏற நோக்கிய
நல் இயல் நவை அறு கவிஞர் நா வரும்
சொல் எனத் தொலைவு இலாத் தூணி தூக்கினான்.
114
தும்பை மாலை சூடியது
7258. கிளர் மழைக் குழுவிடைக் கிளர்ந்த மின் என
அளவு அரு செஞ்சுடர்ப் பட்டம் ஆர்த்தனன்;
இளவரிக் கவட்டு இலை ஆரொடு ஏர் பெறத்
துளவொடு தும்பையும் சுழியச் சூடினான்.
115
இராமன் வில்லை எந்தியது (7259-7260)
7259. ஓங்கிய உலகமும் உயிரும் உட்புறம்
தாங்கிய பொருள்களும் மறையும் தான் எனின்.
நீங்கியது யாவது? நினைக்கிலேம்; அவன்
வாங்கிய வரிசிலை மற்று ஒன்றே கொலோ?
116
7260. நாற் கடல் உலகமும் விசும்பும் நாள் மலர்
தூர்க்க வெம் சேனையும் தானும் தோன்றினான்
மால்கடல் வண்ணன் தான் வளரும் மால் இரும்
பாற் கடலோடும் வந்து எதிரும் பான்மை போல்.
117
இராமன் பின்னணியில் நின்ற இலக்குவனோடு சேர்தல்
7261. ஊழியின் உருத்திரன் உருவு கொண்டு தான்
ஏழ் உயர் உலகமும் எரிக்கின்றான் என
வாழிய வரிசிலைத் தம்பி மாப் படைக்
கூழையின் நெற்றி நின்றானை கூடினான்.
118
அரக்கர் சேனையும் வானர சேனையும் பொருதல்
7262. என்புழி நிருதராம் ஏழு வேலையும்
மின்பொழி எயிறு உடை கவியின் வெள்ளமும்
தனெ்புலக் கிழவனும் செய்கை தீட்டிடப்
புன்புலக் களத்திடைப் பொருத போலுமால்.
119
7263. துமிந்தன தலை; குடர் சொரிந்த; தேர் குலம்
அவிந்தன; புரவியும் ஆளும் அற்றன;
குவிந்தன பிணக்குவை; சுமந்து கோள் நிலம்
நிமிர்ந்தது; பரந்தது குருதி நீத்தமே.
120
வானரங்களின் வீரப் போர் (7264-7265)
7264. கடுங் குரங்கு இருகையால் எற்ற கால் வயக்
கொடுங் குரம் துணிந்தன புரவி; குத்தினால்
ஒடுங்கு உரம் துணிந்தனர் நிருதர்; ஓடின
நெடுங் குரம்பு என நிறை குருதி நீத்தமே.
121
7265. ‘தறெ்கு இது; வடக்கு இது ‘என்னத் தேர்கிலாப்
பல் குவை பரந்தன; குரக்குப் பல்பிணம்
பொன் குவை நிகர்த்தன; நிருதர் போர் சவம்
கல் குவை நிகர்த்தன; மழையும் காட்டின.
122
இராவணன் வில்லின் நாணினைத் தறெித்தல் (7266-7268)
7266. அவ் வழி இராவணன் அமரர் அஞ்சத் தன்
வெவ்விழி நெருப்பு உக வில்லின் நாணினைச்
செவ்வழிக் கோதையின் தறெிப்பச் சிந்தின
எவ்வழி மருங்கினும் இரிந்த வானரம்.
123
7267. உரும் இடித்துழி உலைந்து ஒளிக்கும் நாகம் ஒத்து
இரியல் உற்றன சில; இறந்தவால் சில;
வெருவல் உற்றன சில; விம்மல் உற்றன;
பொருகளத்து உயிரொடும் புரண்டு போம் சில.
124
7268. பொர கருநிற நெடு விசும்பு போழ்பட
இரக்கம் இல் இராவணன் எறிந்த நாணினால்
குரக்கினம் உற்றது என் கூறல்? தன் குலத்து
அரக்கரும் அனையது ஓர் அச்சம் எய்தினார்.
125
இராவணனது நாணொலியால் நடுங்காதவர்கள்
(7269-7270)
7269. வீடணன் ஒருவனும் இளைய வீரனும்
கோடு அணை குரங்கினுக்கு அரசும் கொற்றவன்
நாடினர் நின்றனர்; நாலு திக்கினும்
ஓடினர் அல்லவர்; ஒளித்தது உம்பரே.
126
7270. எடுக்கின், நானிலத்தை ஏந்தும்
இராவணன் எறிந்த நாணால்
நடுக்கினான், உலகை என்பார்;
நல்கினான், என்னல் பாற்றோ?
மிடுக்கினால் மிக்க வானோர்,
மேக்கு உயர் வெள்ளம் மேல் நாள்
கெடுக்கும் நாள் உருமின் ஆர்ப்புக்
கேட்டனர் என்னக் கேட்டார்.
127
இராவணனும் சுக்கிரீவனும் பொருதல் (7271-7274)
7271. ஏந்திய சிகரம் ஒன்று, அங்கு
இந்திரன் குலிசம் என்னக்
காந்திய உருமின் விட்டான்,
கவிக்குலத்து அரசன்; அக்கல்
நீந்தரு நெருப்புச் சிந்தி
நிமிர்தலும், நிருதர்க்கு எல்லாம்
வேந்தனும் பகழி ஒன்றால்,
வெண்துகள் ஆக்கி, வீழ்த்தான்.
128
7272. அண்ணல் வாள் அரக்கன் விட்ட
அம்பினால் அழிந்து, சிந்தி,
திண் நெடுஞ் சிகரம், நீறு ஆய்த்
திசைதிசை சிந்தலோடும்,
கண் நெடுங் கடுந்தீக் கால,
கவிக்குலத்து அரசன், கையால்
மண்மகள் வயிறு கீற,
மரம் ஒன்று வாங்கிக் கொண்டான்.
129
7273. கொண்ட மா மரத்தை அம்பின்
கூட்டத்தால், காட்டத் தக்க
கண்டம் ஆயிரத்தின் மேலும்
உள எனக் கண்டம் கண்டான்
விண்ட வாள் அரக்கன் மீது
விசும்பு எரி பரக்க விட்டான்
பண்டை மால் வரையின் மிக்கது
ஒருகிரி, பரிதி மைந்தன்.
130
7274. அக்கிரிதனையும் ஆங்கு ஓர்
அம்பினால் அறுத்து மாற்றி,
திக்கு இரிதரப் போர் வென்ற
சிலையினை வளைய வாங்கி,
சுக்கிரிவன்தன் மார்பில்
புங்கமும் தோன்றா வண்ணம்
உக்கிர வயிர வாளி
ஒன்று புக்கு ஒளிக்க எய்தான்.
131
சுக்கிரீவன் தளர்ச்சிகண்டு அனுமன் வருதல் (7275-7277)
7275. சுடுகணை படுதலோடும்
துளங்கினான்; துளங்கா முன்னம்
குட திசை வாயில் நின்ற
மாருதி, புகுந்த கொள்கை
உடன் இருந்து அறிந்தான் என்ன,
ஓர் இமை ஒடுங்கா முன்னர்,
வட திசை வாயில் நின்ற
மன்னவன் முன்னன் ஆனான்.
132
7276. பரிதி சேய் தேறா முன்னம்,
பருவலி அரக்க! பல் போர்
புரிதியோ என்னோடு? என்னா,
புகை எழ விழித்துப் பொங்கி,
வருதியே? வா! என்பான் மேல்
மலை ஒன்று நிலையின் வாங்கி,
சுருதியே அனைய தோளால்
வீசினான், காலின் தோன்றல்.
133
7277. மீ எழு மேகம் எல்லாம்
வெந்து, வெங்கரியின் சிந்தித்
தீ எழ, விசும்பின் ஊடு
செல்கின்ற செயலை நோக்கி,
காய் கணை ஐந்தும் ஐந்தும்
கடுப்புறத் தொடுத்துக் கண்டித்து
ஆயிரம் கூறு செய்தான்
அமரரை அலக்கண் செய்தான்.
134
அனுமன் வீசிய மலை இராவணனது வாகுவலயத்தைப் பொடியாக்குதல் (7278-7281)
7278. மீட்டு ஒரு சிகரம் வாங்கி,
வீங்குதோள் விசையின் வீசி,
ஓட்டினான்; ஓட்ட, வானத்து
உரு மினும் கடுக ஓடி,
கோட்டு வெஞ்சிலையின் வாளி முன் சென்று,
கொற்றப் பொன் தோள்
பூட்டிய வலயத்தொடும்
பூழியாய்ப் போயிற்று அன்றே.
135
7279. மெய் எரிந்து அழன்று பொங்கி,
வெங்கணான் விம்மி, மீட்டு ஓர்
மை வரை வாங்குவானை,
வரிசிலை உளைய வாங்கிக்
கையினும் தோளின் மேலும்
மார்பினும் கரக்க வாளி
ஐ இரண்டு அழுந்த எய்தான்;
அவன் அவை ஆற்றி நின்றான்.
136
7280. யார் இது செய்யகிற்பார்?
என்று கொண்டு இமையோர் ஏத்த
மாருதி, பின்னும் ஆங்கு ஓர்
மராமரம் கையின் வாங்கி
வேரொடும் சுழற்றி விட்டான்;
விடுதலும், இலங்கை வேந்தன்
சாரதி தலையைத் தள்ளிச்
சென்றது நிருதர் சாய.
137
7281. மாறி ஒர் பாகன் ஏற,
மறிதிரைப் பரவை பின்னும்
சீறியது அனையன் ஆன
செறிகழல் அரக்கன், தயெ்வ
நூறு கோல் நொய்தின் எய்தான்;
அவை உடல் நுழைதலோடும்,
ஆறு போல் சோரி சோர,
அனுமனும் அலக்கண் உற்றான்.
138
இராவணன் வீரப் பேச்சு (7282-7283)
7282. “கல் கொண்டும் மரங்கள் கொண்டும்
கைக் கொண்டும் களித்து நும் வாய்ச்
சொல் கொண்டும் மயிரின் புன் தோல்
தோள் கொண்டும் துள்ளி வெள்ளிப்
பல் கொண்டும் மலைகின்றாரில்
பழிகொண்டு பயந்தது யான் ஓர்
வில் கொண்டு நின்ற போது
விறல் கொண்டு மீள்திர் போலாம்.
139
7283. என்று த்து, எயிற்றுப் பேழ்வாய்
எரி உக நகை செய்து, யாணர்ப்
பொன் தொடர் வடிம்பின் வாளி
கடை உகத்து உருமு போல
ஒன்றின் ஒன்று அதிகம் ஆக,
ஆயிர கோடி உய்த்தான்;
சென்றது குரங்குச் சேனை,
கால் எறி கடலின் சிந்தி.
140
இலக்குவன் இராவணனோடு போர் செய்ய வருதல்
7284. கலக்கிய அரக்கன் வில்லின்
கல்வியும், கவிகள் உற்ற
அலக்கணும், தலைவர் செய்த
தன்மையும், அமையக் கண்டான்,
இலக்குவன், ‘என் கை வாளிக்கு
இலக்கு இவன்; இவனை இன்று
விலக்குவென் ‘என்ன வந்தான்,
வில் உடை மேரு என்ன.
141
இலக்குவன் நாணொலி செய்தல்
7285. தேயத்தின் தலைவன் மைந்தன்
சிலையை நாண் எறிந்தான்; தீய
மாயத்தின் வினையை வல்லார்
நிலை என்னை? முடிவில் மாரி
ஆயத்தின் இடி இது என்றே
அஞ்சின உலகம்; யானை
சீயத்தின் முழக்கம் கேட்டல்
போன்றனர் செறுநர் எல்லாம்.
142
இராவணன் வியத்தல்
7286. ஆற்றல் சால் அரக்கன் தானும், அயல்
நின்ற வயவர் நெஞ்சம்
வீற்று வீற்று ஆகி உற்ற
தன்மையும், வீரன் தம்பி
கூற்றின் வெம்புருவம் அன்ன
சிலை நெடுங் குரலும் கேளா,
ஏற்றினன் மகுடம் ‘என்னே
இவன் ஒரு மனிசன் என்னா! ‘
143
இலக்குவன் அம்புமாரி (7287-7298)
7287. கட்டு அமை தேரின் மேலும்,
களி நெடுங் களிற்றின் மேலும்,
விட்டு எழு புரவி மேலும்,
வெள் எயிற்று அரக்கர் மேலும்
முட்டிய மழையின் துள்ளி
முறை இன்றி மொய்க்குமா போல்
பட்டன பகழி; எங்கும்
பரந்தது, குருதிப் பௌவம்
144
7288. நகங்களின் பெரிய வேழ
நறை மத அருவி காலும்
முகங்களில் புக்க வாளி
அபரத்தை முற்றி மொய்ம்பர்
அகங்களிற் கழன்று, தேரின்
அச்சினை உருவி, அப்பால்
உகங்களின் கடை சென்றாலும்,
ஓய்வு இல ஓடலுற்ற.
145
7289. நூக்கிய களிறும் தேரும்
புரவியும் நூழில் செய்ய,
ஆக்கிய அரக்கர் தானை,
ஐ இருகோடி, கை ஒத்து
ஓக்கிய படைகள் வீசி
உடற்றிய உலகம் செய்த
பாக்கியம் அனைய வீரன்
தம்பியைச் சுற்றும் பற்றி.
146
7290. ‘உறுபகை மனிசன் இன்று எம்
இறைவனை உறுகிற்பானேல்
வெறுவிது, நம்தம் வீரம் ‘
என்று ஒரு மேன்மை தோன்ற
எறிபடை அரக்கர் ஏற்றார்
ஏற்ற கை மாற்றான் என்னா
வறியவர் ஒருவன் வண்மை
பூண்டவன் மேல் சென்றென்ன.
147
7291. அறுத்தனன் அரக்கர் எய்த
எறிந்தன, அறுத்து, அறாத
பொறுத்தனன், பகழி மாரி
பொழிந்தனன்; உயிரின் போகம்
வெறுத்தனன் நமனும்; வேலை
உதிரத்தின் வெள்ளம் மீள
மறித்தன; மறிந்த எங்கும்,
பிணங்கள் அம் மலைகள் மான.
148
7292. தலை எலாம் அற்ற; முற்றும்
தாள் எலாம் அற்ற; தோளாம்
மலை எலாம் அற்ற; பொன்
தார் மார்பு எலாம் அற்ற; சூலத்து
இலை எலாம் அற்ற; வீரர்
எயிறு எலாம் அற்ற; கொற்றச்
சிலை எலாம் அற்ற; கற்ற
செரு எலாம் அற்ற, சிந்தி.
149
7293. தேர் எலாம் துமிந்த; மாவின்
திறமெலாம் துமிந்த; செங்கண்
கார் எலாம் துமிந்த; வீரர்
கழல் எலாம் துமிந்த; கண்டத்
தார் எலாம் துமிந்த; நின்ற
தனு எலாம் துமிந்த; தத்தம்
போர் எலாம் துமிந்த; கொண்ட
புகழ் எலாம் துமிந்து போய.
150
7294. அரவு இயல் தறுகண் வன்தாள்
ஆள் விழ ஆள் மேல் வீழ்ந்த
புரவி மேல் பூட்கை வீழ்ந்த;
பூட்கைமேல் பொலன் தேர் வீழ்ந்த;
நிரவிய தேரின் மேன்மேல்
நெடுந்தலை கிடந்த; நெய்த்தோர்
விரவிய களத்துள் எங்கும்
வெள்ளிடை அரிது வீழ.
151
7295. கடுப்பின் கண் அமரரேயும்
‘கார்முகத்து அம்பு கையால்
தொடுக்கின்றான் துரக்கின்றான் ‘
என்று உணர்ந்திலர்; துரந்த வாளி
இடுக்கு ஒன்றும் காணார்;
காண்பது எய்த கோல் நொய்தின் எய்திப்
படுக்கின்ற பிணத்தின் பம்மல்
குப்பையின் பரப்பே பல்கால்.
152
7296. கொற்ற வாள் கொலை வேல், சூலம்
கொடுஞ் சிலை முதல வாய
வெற்றி வெம்படைகள் யாவும்
வெந் தொழில் அரக்கர் மேல் கொண்டு
உற்றன கூற்றும் அஞ்ச
ஒளிர்வன ஒன்று நூறாய்
அற்றன அன்றி ஒன்றும்
அறாதன இல்லை அன்றே.
153
7297. குன்று அன யானை, மானக்
குரகதம், கொடித் தேர், கோப
வன் திறல் ஆளி, சீயம்
மற்றைய பிறவும் முற்றும்
சென்றன எல்லை இல்லை;
திரிந்தில சிறிது போதும்;
நின்றன இல்லை; எல்லாங்
கிடந்தன, நெளிந்து, பார்மேல்.
154
7298. சாய்ந்தது நிருதர் தானை
தமர்தலை இடறித் தள்ளுற்று
ஓய்ந்ததும் ஒழிந்தது ஓடி
உலந்ததும் ஆக; அன்றே
வேய்ந்தது வாகை வீரற்கு
இளையவன் வரிவில்; வெம்பிக்
காய்ந்தது அவ் இலங்கை
வேந்தன் மனம் எனும் காலச் செந் தீ.
155
இராவணனெருங்கவும் இலக்குவன் பெயராது
நிற்றல் (7299-7302)
7299. காற்று உறழ் கலின மான் தேர்
கடிதினின் கடாவிக் கண்ணுற்று
ஏற்றனன் இலங்கை வேந்தன்
எரி விழித்து இராமன் தம்பி
கூற்று மால் கொண்டது என்னக்
கொல்கின்றான் குறுகச் சென்றான்
சீற்றமும் தானும் நின்றான்;
பெயர்ந்திலன் சிறிதும் பாதம்.
156
7300. காக்கின்ற என் நெடுங்காவலின்
வலி நீக்கிய கள்வா!
போக்கு இன்று உனக்கு அரிதால்
எனப் புகன்றான்; புகை உயிர்ப்பான்
கோக்கின்றன தொடுக்கின்றன
கொலை அம்புகள் தலையோடு
ஈர்க்கின்றன கனல் ஒப்பன
எய்தான்; இகல் செய்தான்.
157
7301. எய்தான் சரம் எய்தாவகை
இற்று ஈக என இடையே
வைதால் என வைது ஆயின
வடி வாளியின் அறுத்தான்
ஐது ஆதலின் அறுத்தாய்; இனி
அறுப்பாய் என அழி கார்
பெய்தால் எனச் சர மாரிகள்
சொரிந்தான், துயில் பிரிந்தான்.
158
7302. ஆம் குஞ்சரம் அனையான் விடும்
அயில் வாளிகள் அவை தாம்
வீங்கும் சரற் பருவத்து இழி
மழை போல்வன விலக்காத்
தூங்குஞ் சர நெடும் புட்டிலின்
சுடர் வேலவற்கு இளையான்
வாங்குஞ் சரம் வாங்காவகை
அறுத்தான் அறம் மறுத்தான்.
159
அனுமன் இடையே புகுதல்
7303. அப்போதையின் அயர்வு ஆறிய
அனுமான் அழல் விழியா
பொய்ப் போர் சில புரியேல் இனி
என வந்து இடை புகுந்தான்
கைப் போதகம் என முந்து
அவன் கடுந்தேர் எதிர் நடந்தான்
இப் போர் ஒழி; பின் போர் உள;
இவை கேள் என இசைத்தான்.
160
அனுமன் பேருருவங்கொண்டு இராவணனெதிர்
நிற்றல்
7304. ‘வென்றாய் உலகு ஒருமூன்றையும்,
மெலியா நெடு வலியால்;
தின்றாய் செறிகழல் இந்திரன்
இசையை; திசை திரித்தாய்;
என்றலும், இன்று அழிவு உன்வயின்
எய்தும், என இசையா,
நின்றான் அவன் எதிரே, உலகு
அளந்தான் என நிமிர்ந்தான்.
161
இராவணனுக்கு அனுமன் தன் பேருருவத்தைக் காட்டல்
7305. எடுத்தான் வலத் தடக்கையினை;
அது போய், உலகு எல்லாம்
அடுத்து ஆங்கு உற, அளந்தான்
திருவடியின் வடிவு என்ன,
மடுத்து ஆங்கு உற வளர்ந்தான்
என வளர்கின்றவன், உருவம்
கடுத்தான் எனக் கொடியாற்கு
எதிர் ‘காண்பாய் ‘எனக்காட்டா.
162
அனுமனது வீரப் பேச்சு (7306-7309)
7306. வில் ஆயுதம் முதலாகிய வய
வெம்படை மிடலோடு
எல்லாம் இடை பயின்றாய்; புயம்
நால் ஐந்தினோடு இயைந்தாய்;
இல்லாய் செரு; வலியாய்; திறல்
மறவோய்! இனி, எதிரே
நில்லாய், என நிகழ்த்தா, நெடு
நெருப்பாம் என உயிர்ப்பான்.
163
7307. நீள் ஆண்மையின் உடனே எதிர்
நின்றாய்; இஃது ஒன்றோ?
வாள் ஆண்மையும், உலகு ஏழினொடு
உடனே உடை வலியும்,
தாளாண்மையும், நிகர் ஆரும் இல்
தனி ஆண்மையும், இனி நின்
தோளாண்மையும், இசையோடு உடன்
துடைப்பேன், ஒரு புடைப்பால்.
164
7308. ‘பரக்கப் பல த்து என்? படர்
கயிலைப் பெருவரைக்கும்,
அரக்கு உற்று எரி பொறிக் கண் திசைக்
கரிக்கும், சிறிது அனுங்கா
உரக் குப்பையின் உயர்தோள் பல
உடையாய்! உரன் உடையாய்
குரக்குத் தனிக் கரத்தின் புடை
புடைப்பு ஆற்றுதி கொல்லாம்.
165
7309. ‘என்தோள் வலி அதனால் எடுத்து
யான் எற்றவும், இறவா
நின்றாய் எனின், நீ பின் எனை
நின் கைத்தல நிரையால்,
குன்றே புரை தோளாய்!
மிடல் கொடு குத்துதி; குத்தப்
பொன்றேன்; எனின், நின்னோடு
எதிர் பொருகின்றிலென் ‘என்றான்.
166
அனுமன் கூறியது கேட்டு இராவணன் வியத்தல்
(7310-7315)
7310. காரின் கரியவன், மாருதி
கழற, கடிது உகவா,
வீரற்கு உரியது சொற்றனை;
விறலோய் ஒரு தனி என்
நேர் நிற்பவர் உளரோ பிறர்
நீயல்லவர்? இனி உன்
பேருக்கு உலகு அளவே? இனி,
உளவோ பிற? என்றான்.
167
7311. ‘ஒன்று ஆயுதம் உடையாய் அலை;
ஒரு நீ எனது உறவும்
கொன்றாய்; உயர்தேர்மேல் நிமிர்
கொடு வெஞ்சிலை கோலி,
வன் தானையின் உடன் வந்த என்
எதிர் வந்து, நின் வலியால்
நின்றாயொடு நின்றார் இனி
நிகரோ? , நெடியோய்.
168
7312. ‘முத்தேவர்கள் முதலாயினர்,
முழுமூன்று உலகிடையும்
எத்தேவர்கள், எத்தானவர்,
எதிர்வார் இகல் என்நேர்,
பித்து ஏறினர் அல்லால்?
இடைபேராது, எதிர், “மார்பில்
குத்தே ‘‘ என நின்றாய்; இது
கூறும் தரம் அன்றால்.
169
7313. ‘பொரு கைத் தலம் இருபத்து உள;
புகழும் பெரிது உளதால்;
வரு கைத்தல மத வெங்கரி
வசைபட்டன; வருவாய்,
இரு கைத்தலம் உடையாய், எதிர்
இவை சொற்றனை இனிமேல்
தருகைக்கு உரியது ஓர் கொற்றம் என்?
அமர்தக்கதும் அன்றால்.
170
7314. ‘திசை அத்தனையையும் வென்றது
சிதைய, புகழ் தறெும் அவ்
வசை மற்று இனி உளதே? எனது
உயிர் போல்வரும் மகனை
அசையத் தரை அரைவித்தனை;
அழி செம்புனல் அதுவோ
பசை அற்றிலது; ஒரு நீ, எனது
எதிர் நின்று இவை பகர்வாய்!
171
7315. ‘பூணித்து இவை செய்தனை;
அதனால், பொதுவே;
பாணித்தது; பிறிது என்
சில பகர்கின்றது? பழியால்
நாணித் தலை இடுகின்றிலென்;
நனிவந்து, உலகு எவையும்
காண, கடிது எதிர் குத்துதி ‘
என்றான், வினைகடியான்.
172
அனுமன் இராவணனைக் குத்துதல்
7316. ‘வீரத்திறம் இது நன்று! ‘என
வியவா, மிக விளியா,
தேரில் கடிது இவரா,
முழுவிழியில் பொறி சிதறா,
ஆரத்தொடு கவசத்து உடல்
பொடிபட்டு உக, அவன் மா
மார்பில் கடிது எதிர் குத்தினன்,
வயிரக் கரம் அதனால்.
173
அனுமனது குத்தின் விளைவுகள் (7317-7319)
7317. அயிர் உக்கன, நெடு மால் வரை;
அனல் உக்கன, விழிகள்;
தயிர் உக்கன, முழுமுளைகள்;
தலை உக்கன; தரியா
உயிர் உக்கன, நிருதக்குலம்;
உயர் வானரம் எவையும்,
மயிர் உக்கன, எயிறு உக்கன;
மழை உக்கன, வானம்.
174
7318. வில் சிந்தின நெடு நாண்; நிமிர்
கரை சிந்தின, விரிநீர்;
கல் சிந்தின, குல மால்வரை;
கதிர் சிந்தின, சுடரும்;
பல் சிந்தின மதம் யானைகள்;
படை சிந்தினர், எவரும்;
எல் சிந்தின எரி சிந்தின,
இகலோன் மணி அகலம்.
175
7319. கைக்குத்து அது படலும் கழல்
நிருதர்க்கு இறை கறைநீர்
மைக் குப்பையின் எழில் கொண்டு
ஒளிர் வயிரத் தட மார்பில்
திக்கில் சின மத யானைகள்
வய வெம்பணை செருவில்
புக்கு இற்றன, போகாதன,
புறம் உக்கன, புகழின்.
176
இராவணன் தள்ளாடுதல்
7320. அள்ளாடிய கவசத்து அவிர்மணி
அற்றன, திசைபோய்
விள்ளா நெடு முழுமீன் என விழ,
வெம்பொரி எழ, நின்று
உள் ஆடிய நெடுங்கால் பொர,
ஒடுங்கா உலகு உலையத்
தள்ளாடிய வடமேருவின்
சலித்தான், அறம் வலித்தான்.
177
இராவணன் சலித்தமை கண்டு வானவரும்
வானரரும் மகிழ்தல்
7321. ஆர்த்தார், விசும்பு உறைவோர் நெடிது;
அனுமான்மிசை அதிகம்
தூர்த்தார், நறு முழு மென்மலர்;
இசை ஆசிகள் சொன்னார்;
வேர்த்தார் நிருதர்கள்; வானரர்
வியந்தார், ‘இவன் விசயம்
தீர்த்தான் ‘என உவந்து ஆடினர்,
முழு மெய்ம்மயிர் சிலிர்த்தார்.
178
இராவணன் உணர்வு பெறுதல்
7322. கற்று அங்கியின் நெடுவாயுவின்
நிலை கண்டவர், கதியால்
மற்று அங்கு ஒரு வடிவு உற்று,
அது மாறாடுறு காலைப்
பற்று அங்கு அருமையின்,
அன்னது பயில்கின்றது ஒர் செயலால்,
உற்று அங்கு அது புறம்போய்,
உடல் புகுந்தால் என உணர்ந்தான்.
179
இராவணன் அனுமனைப் புகழ்தல் (7323-7326)
7323. உணரா, நெடிது உயிரா,
உதவா, எரி உமிழா,
‘இணை யாரும் இலாய்!
என்றனை எய்தா வலி செய்தாய்!
அணையாய்; இனி, எனது ஊழ் ‘
என அடரா, எதிர்படரா,
பணையார் புயம் உடையான்,
இடை சில இம்மொழி பகர்வான்.
180
7324. வலி என்பதும் உளதே, அது
நின்பாலது மறவோய்!
அலி என்பவர், புறம் நின்றவர்,
உலகு ஏழினும் அடைத்தாய்;
‘சலி ‘என்று எதிர் மலரோன்
தந்தால், இறை சலியேன்;
மெலிவு என்பதும் உணர்ந்தேன்;
எனை வென்றாய், இனி, விறலோய்!
181
7325. ‘ஒன்று உண்டு இனி, நேர்குவது;
உன் மார்பின், என் ஒருகை,
குன்றின் மிசை கடைநாள் விழும்
உருமு ஏறு எனக் குத்த
நின்று நிலைதருவாய் எனின்,
நின் நேர் பிறர் உளரோ?
இன்றும் உளை; என்றும் உளை;
இலை ஓர் பகை ‘என்றான்.
182
7326. என்றான், எதிர் சென்றான்;
இகல் அடு மாருதி, ‘எனை நீ
வென்றாய் அலையோ? உன்
உயிர் வீடாது, செய்தாய்;
நன்றாக நின் நிலை நன்று ‘
என நல்கா, எதிர் நடவா,
குன்று ஆகிய திரள் தோள!
உன் கடன் கொள்க என கொடுத்தான்.
183
இராவணன் குத்துதல்
7327. உறுக்கி, தனி எதிர் நின்றவன்
உரத்தில், தனது ஒளிர் பல்
இறுக்கி, பில நெடுவாய் மடித்து,
எரி கண்தொறும் இழிய,
முறுக்கிப் பொதி நிமிர் பல விரல்
நெரிய, திசை முரியக்
குறுக்கிக் கரம், நெடுந்தோள் புறம்
நிமிரக், கொடு குத்த.
184
இராவணன் குத்த அனுமன் சலித்தல்
7328. பள்ளக்கடல் கொள்ளப் படர்
படி பேரினும் பதையான்,
வள்ளப் பெரு வெள்ளத்து எறுழ்
வலியாரினும் வலியான்,
கள்ளக் கறை உள்ளத்து அதிர்கழல்
வெய்யவன் கரத்தால்
தள்ள, தளர் வெள்ளிப் பெருங்கிரி
ஆம் எனச் சலித்தான்.
185
அனுமான் சலிக்கச் சலித்தவை
7329. சலித்த காலையில், இமையவர்
உலகொடும் சலித்தார்;
சலித்தால் அறம்; சலித்தது,
மெய்ம்மொழி; தகவும்
சலித்தது; அன்றியும், புகழொடு
சுருதியும் சலித்த;
சலித்த நீதியும்; சலித்தன
கருணையும் தவமும்.
186
அப்போது வானரர் மலையை எடுத்து இராவணன்மேல் வீசுதல் (7330-7334)
7330. அனைய காலையின், அரிக்குலத்
தலைவர் அவ் வழியோர்
எனையர் அன்னவர் யாவரும்,
ஒரு குவடு ஏந்தி,
நினைவின் முன் நெடு விசும்பு ஒரு
வெளி இன்றி நெருங்க,
வினை இது என்று அறிந்து இராவணன்
மேல் செலவிட்டார்.
187
7331. ஒத்த கையினர், ஊழியின்
இறுதியின் உலகை
மெத்த மீது எழு மேகத்தின்
விசும்பு எலாம் மிடைய,
பத்து நூறு கோடிக்கு மேல்
பனிபடு சிகரம்,
எத்த, மேல் செல எறிந்தனர்;
பிறிந்தனர் இமையோர்.
188
7332. தருக்கி, வீசிட, விசும்பு இடம்
இன்மையின், தம்மின்
நெருக்குகின்றன, நின்றன;
சென்றில, நிறைந்த;
அருக்கனும் மறைந்தான்; இருள்
விழுங்கியது அண்டம்;
சுருக்கம் உற்றனர், அரக்கர் என்று
இமையவர் சூழ்ந்தார்.
189
7333. ஒன்றின் ஒன்று பட்டு உடைவன,
இடித்து உரும் அதிரச்,
சென்ற வன்பொறி மின்பல
செறிந்திட, தயெ்வ
வென்றி வில் என விழுநிழல்
விரிந்திட, மேல் மேல்
கன்றி ஓடிடக் கல் மழை
நிகர்த்தன கற்கள்.
190
7334. இரிந்து நீங்கினது இராக்கதப்
பெரும்படை; எங்கும்
விரிந்து சிந்தின, வானத்து
மீனோடு விமானம்;
சொரிந்த வெம்பொறி பட, கடல்
சுவறின; தோற்றம்
கரிந்த கண்டகர் கண்மணி;
என் பல கழறி?
191
இராவணன் அம்மலைகளை அம்புகளால் விலக்கல்
7335. இறுத்தது இன்று உலகு என்பது ஓர்
திமிலம் வந்து எய்த
கறுத்த சிந்தையன் இராவணன்
அனையது கண்டான்;
ஒறுத்து வானவர் புகழ்கொண்ட
பாரவில் உளைய
அறுத்து நீக்கினன் ஆயிர
கோடிமேல் அம்பால்.
192
இராவணன் அம்பால் மலைகள் சாம்பலாதல்
7336. காம்பு எலாம் கடுந்துகள் பட,
களிறு எலாம் துணிய,
பாம்பு எலாம் பட, யாளியும்
உழுவையும் பாற,
கூம்பல் மாமரம் எரிந்து உக,
குறுந்துகள் நெறுங்க,
சாம்பல் ஆயின, தடவரை
சுடுகணை தடிய.
193
இராவணன் திறலை இமையவர் வியத்தல் (7337-7345)
7337. உற்றவா என்றும், ஒன்று நூறு
ஆயிரம் உருவா
இற்றவா என்றும், இடிப்பு உண்டு
பொடிப் பொடியாகி
அற்றவா என்றும், அரக்கனை
அடுசிலைக் கொடியோன்
கற்றவா என்றும், வானவர்
கைத்தலம் குலைந்தார்.
194
7338. ‘அடல் துடைத்தும் ‘என்று அரிக்குல
வீரர் அன்று எறிந்த
திடல் துடைத்தன, தசமுகன்
கரம்; அவை திசை சூழ்
கடல் துடைத்தன; களத்தின் நின்று
உயர்தரு பூமி
உடல் துடைத்தன உதிரமும்
துடைத்தது, ஒண்புடவி.
195
7339. “கொல்வென், இக்கணமே மற்று இவ்
வானரக் குழுவை;
வெல்வென், மானிடர் இருவரை ‘‘
எனச் சினம் வீங்க,
வல்வன் வார்சிலை பத்து உடன்
இடக் கையில் வாங்கி,
தொல் வான் மாரியின் தொடர்வன
சுடு சரம் துரந்தான்.
196
7340. ஐ இரண்டு கார்முகத்தினும்
ஆயிரம் பகழி
கைகள் ஈர் ஐந்தினாலும்,
வெங்கடுப்பினில் தொடுப்புற்று
எய்ய, எஞ்சின, வானமும்,
இருநில வரைப்பும்,
மொய் கொள் வேலையும், திசைகளும்,
சரங்களாய் முடிந்த.
197
7341. அந்தி வானகம் ஒத்தது, அவ்
அமர் களம், உதிரம்
சிந்தி; வேலையும் திசைகளும்
நிறைந்தன சரத்தால்
பந்தி பந்தியாய் மடிந்தது,
வானரப் பகுதி;
வந்து மேகங்கள் படிந்தன,
பிணப் பெரு மலை மேல்.
198
7342. நீலன் அம்பொடு சென்றிலன்;
நின்றிலன் அனிலன்;
காலனார் வயத்து அடைந்திலன்,
ஏவுண்ட கவயன்;
ஆலம் அன்னது ஓர்
சரத்தொடும் அங்கதன் அயர்ந்தான்;
சூலம் அன்னது ஓர்
வாளியால் சோம்பினன், சாம்பன்.
199
7343. மற்றும் வீரர்தம் மருமத்தின்
அயில் அம்பு மடுப்ப,
கொற்ற வீரமும் ஆண்தொழில்
செய்கையும் குறைந்தார்;
சுற்றும் வானரப் பெருங்கடல்
தொலைந்தது; தொலையாது
உற்று நின்றவர் ஓடினர்;
இலக்குவன் உருத்தான்.
200
7344. நூறு கோடிய, நூறு
நூறாயிர கோடி,
வேறு வேறு எய்த சரம் எலாம்
சரங்களால் விலக்கி,
ஏறு சேவகன் தம்பி, அவ்
இராவணன் எடுத்த
ஆறு நாலு வெஞ்சிலையையும்
கணைகளால் அறுத்தான்.
201
7345. ஆர்த்து, வானவர் ஆவலம்
கொட்டினர்; அரக்கர்
வேர்த்து, நெஞ்சமும் வெதும்பினர்;
வினை அறு முனிவர்
தூர்த்து, நாள்மலர் சொரிந்தனர்;
இராவணன் தோளைப்
பார்த்து உவந்தனன்; குனித்தது,
நல்லறம் பாடி.
202
இலக்குவனை இராவணன் பாராட்டல் (7346-7352)
7346. ‘நன்று, போர்வலி; நன்று போர்
ஆள் வலி; வீரம்
நன்று; நோக்கமும் நன்று; கைக்
கடுமையும் நன்று;
நன்று கல்வியும்; நன்று நின்
ஆண்மையும் நலனும்;
என்று கைம் மறித்து, இராவணன்,
‘ஒருவன் நீ ‘என்றான்.
203
7347. ‘கானின் அன்று இகல் கரன் படை
படுத்த அக் கரியோன்
தானும், இந்திரன் தன்னை
ஓர் தனுவலம் தன்னால்
வானில் வென்ற என்
மதலையும், வரிசிலை பிடித்த
யானும், அல்லவர் யார் உனக்கு
எதிர்? ‘என்றும் இசைத்தான்.
204
7348. ‘வில்லினால் இவன் வெலப்படான் ‘
எனச் சினம் வீங்க,
‘கொல்லும் நாளும் இன்று இது ‘
எனச் சிந்தையில் கொண்டான்,
பல்லினால் இதழ் அதுக்கினன்;
பருவலிக் கரத்தால்
எல்லின் நான்முகன் கொடுத்தது
ஓர் வேல் எடுத்து எறிந்தான்.
205
7349. எறிந்த கால வேல், எய்த
அம்பு யாவையும் எரிந்து
பொறிந்து போய் உக, தீ உக,
விசையினிற் போகி
செறிந்த தாரவன் மார்பிடைச்
சென்றது; சிந்தை
அறிந்த மைந்தனும் அமர் நெடுங்
களத்திடை அயர்ந்தான்.
206
7350. இரியலுற்றது வானரப்
பெரும்படை; இமையோர்
பரியலுற்றனர்; உலைந்தனர்,
முனிவரும் பதைத்தார்;
விரி திரைக் கடற்கு இரட்டி கொண்டு
ஆர்த்தனர் விரவார்;
திரிகை ஒத்தது, மண்தலம்;
கதிர் ஒளி தீர்ந்த.
207
7351. அஞ்சினான் அலன், அயன் தந்த
வேலினும் ஆவி
துஞ்சினான் அலன்; துளங்கினான் ‘
என்பது துணியா
‘எஞ்சு இல் யாக்கையை எடுத்துக் கொண்டு
அகல்வென் ‘என்று எண்ணி
நஞ்சினால் செய்த நெஞ்சினான்
பார்மிசை நடந்தான்.
208
7352. உள்ளி வெம் பிணத்து உதிரநீர்
வெள்ளத்தின் ஓடி
அள்ளி அம்கைகள் இருபதும்
பற்றிப் பண்டு அரன் மா
வெள்ளி அம்கிரி எடுத்தது
வெள்கினான் ஏனை
எள் இல் பொன்மலை எடுக்கல் உற்றான்
என எடுத்தான்.
209
இலக்குவனை இராவணன் எடுக்க இயலாமை
7353. அடுத்த நல் உணர்வு ஒழிந்திலன்,
அம்பரம் செம்பொன்
உடுத்த நாயகன் தானென
உணர்தலின், ஒருங்கே
தொடுத்த எண்வகை மூர்த்தியைத்
துளக்கி வெண்பொருப்பை
எடுத்த தோள்களுக்கு எழுந்திலன்
இராமனுக்கு இளையான்.
210
இராவணன் கைகளுக்கிடையில் இலக்குவன்
7354. தலைகள் பத்தொடும் தழுவிய
தசமுகத் தலைவன்,
நிலைகொள் மாகடல் ஒத்தனன்;
கரம், புடை நிமிரும்
அலைகள் ஒத்தன; அதில் எழும்
இரவியை ஒத்தான்,
இலை கொள் தண்துழாய் இலங்குதோள்
இராமனுக்கு இளையான்
211
இலக்குவனை அனுமன் எடுத்துச் செல்லுதல்
(7355-7357)
7355. எடுக்கல் உற்று, அவன் மேனியை
ஏந்துதற்கு ஏற்ற
மிடுக்கு இலாமையின், இராவணன்
வெய்துயிர்ப்பு உற்றான்;
இடுக்கில் நின்ற அம்மாருதி
புகுந்து எடுத்து ஏந்தி,
தடுக்கலாதது ஓர் விசையினன்
எழுந்து, அயல் சார்ந்தான்.
212
7356. தொக ஒருங்கிய ஞானம் ஒன்று
எவரினும் தூயான்
தகவு கொண்டது ஓர் அன்பு
எனும் தனித்துணை அல்லால்,
அகவு காதலால், ஆண்தகை
என்னினும், அனுமன்,
மகவு கொண்டு போய் மரம்
புகும் மந்தியை நிகர்த்தான்.
213
7357. மையல் கூர்மனத்து இராவணன்
படையினால் மயங்கும்
செய்ய வாள் அரி ஏறு அனான்
சிறிதினில் தேற,
கையும் கால்களும் நயனமும்
கமலமே அனைய
பொய் இலாதவன் நின்றிடத்து,
அனுமனும் போனான்.
214
இராமன் இராவணனோடு போர்க்குப் போதல்
7358. போன காலையில், புக்கனன்
புங்கவன், போர் வேட்டு
யானை மேல் செலும் கோள்
அரி ஏறு இவன் என்ன;
வானுேளார் கணம் ஆர்த்தது;
தூர்த்தது மலர், மேல்;
தூ நவின்ற வேல் அரக்கனும்,
தேரினைத் துரந்தான்.
215
இராமன் தேரில்லாது செல்வதுகண்டு அனுமன்
வருதல் (7359-7360)
7359. தேரில் போர் அரக்கன் செலச்,
சேவகன் தனியே
பாரில் செல்கின்ற வறுமையை
நோக்கினன், பரிந்தான்,
‘சீரில் செல்கின்றது இல்லை இச்
செரு ‘எனும் திறத்தால்,
வாரின் பெய் கழல் மாருதி
கதுமென வந்தான்.
216
7360. ‘நூறு பத்துடை நொறில்
பரித் தேரின்மேல் நுன்முன்
மாறு இல் போர் அரக்கன்
பொர, நிலத்து நீ மலைதல்
வேறு காட்டும், ஓர் வெறுமையை;
மெல்லிய எனினும்
ஏறு நீ, ஐய! என்னுடைத்
தோளின் மேல் ‘என்றான்
217
இராமன் நன்றென அனுமன் தோள்மேல் அமர்தல்
7361. ‘நன்று, நன்று! ‘என நாயகன்
ஏறினன் நாமக்
குன்றின் மேல் இவர் கோள் அரி
ஏறு எனக் கூடி,
அன்று வானவர் ஆசிகள்
இயம்பினர்; ஈன்ற
கன்று தாங்கிய தாய் என
மாருதி களித்தான்.
218
அனுமனைக் கண்டு கலுழனும் அனந்தனும் நாணுதலும் நடுங்குதலும்
7362. மாணி ஆய் உலகு அளந்த
நாளவன் உடை வடிவை
ஆணியாய் உணர் மாருதி
அதிசயம் உற்றான்;
காணியாகப் பண்டு உடையனாம்
ஒருதனிக் கலுழன்
நாணினான்; மற்றை அனந்தனும்
தலை நடுக்கு உற்றான்.
219
அனுமன் தோளில் இராமன் அமர்ந்தமைக்குவமை
(7363-7364)
7363. ஓதம் ஒத்தனன் மாருதி;
அதன் அகத்து உறையும்
நாதன் ஒத்தனன் என்னினோ,
துயில்கிலன் நம்பன்;
வேதம் ஒத்தனன் மாருதி;
வேதத்தின் சிரத்தின்
போதம் ஒத்தனன் இராமன்;
வேறு இதின் இலை பொருவே.
220
7364. தகுதியாய் நின்ற வென்றி
மாருதி தனிமை சார்ந்த
மிகுதியை வேறு நோக்கின்,
எவ்வணம் விளம்பும் தன்மை?
புகுதி கூர்ந்துள்ளார் வேதம்
பொதுவுறப் புலத்து நோக்கும்
பகுதியை ஒத்தான்; வீரன்,
மேலைத் தன் பதமே ஒத்தான்.
221
அனுமானது தோளின் பெருமை
7365. மேருவின் சிகரம் போன்றது
என்னினும், வெளிறு உண்டாமால்
மூரிநீர் அண்டம் எல்லாம்
வயிற்றிடை முன்னம் கொண்ட
ஆரியற்கு, அனேக மார்க்கத்தால்,
இடம் வலமது ஆகச்
சாரிகை திரியல் ஆன மாருதி
தாமப் பொன் தோள்
222
அருந்தவர் ஆசியும் வானவர் வருகையும்
7366. ஆசி சொல்லினர் அருந்தவர்;
அறம் எனும் தயெ்வம்
காசு இல் நல் நெடுங் கரம்
எடுத்து ஆர்த்தது; கயிலை
ஈசன் நான்முகன் என்றிவர்
முதலிய இமையோர்
பூசல் காணிய வந்தனர்
அந்தரம் புகுந்தார்.
223
இராமன் வில்நாணைத் தறெித்தல்
7367. அண்ணல், அஞ்சன வண்ணனும்,
அமர் குறித்து அமைந்தான்
எண்ணரும் பெருந் தனிவலிச்
சிலையை நாண் எறிந்தான்;
மண்ணும் வானமும், மற்றைய
பிறவும், தன் வாய்ப் பெய்து
உண்ணும் காலத்து, அவ் உருத்திரன்
ஆர்ப்பு ஒத்தது ஓதை.
224
நாணொலியின் விளைவுகள்
7368. ஆவி சென்றிலர், நின்றிலர்,
அரக்கரோடு இயக்கர்;
நா உலர்ந்தனர்; கலங்கினர்,
விலங்கினர்; நடுங்கி,
கோவை நின்ற பேர்
அண்டமும் குலைந்தன; குலையாத்
தேவ தேவனும், விரிஞ்சனும்,
சிர தலம் குலைந்தார்.
225
இராம இராவணர் போர் (7369-7373)
7369. ஊழி வெங் கனல் ஒப்பன,
துப்பு அன உருவ,
ஆழி நீரையும் குடிப்பன,
திசைகளை அளப்ப,
வீழின், மீச்செலின், மண்ணையும்,
விண்ணையும், தொளைப்ப,
ஏழு வெஞ்சரம், உடன் தொடுத்து,
இராவணன் எய்தான்.
226
7370. எய்த வாளியை, ஏழினால்,
ஏழினோடு ஏழு
செய்து, வெஞ்சரம் ஐந்து ஒரு
தொடையினில் சேர்த்தி,
வெய்து கால வெங்கனல்களும்
வெள்குற, பொறிகள்
பெய்து போம்வகை, இராகவன்
சிலையினில் பெய்தான்.
227
7371. வாளி ஐந்தையும் ஐந்தினால்
விசும்பிடை மாற்றி,
ஆளி மொய்ம்பின் அவ் அரக்கனும்,
ஐ – இரண்டு அம்பு
தோளில் நாண் உற வாங்கினன்,
துரந்தனன்; சுருதி
ஆளும் நாயகன் அவற்றையும்
அவற்றினால் அறுத்தான்.
228
7372. அறுத்து, மற்று அவன் அயல் நின்ற
அளப்பரும் அரக்கர்
செறுத்து விட்டன படை எலாம்
கணைகளால் சிந்தி,
இறுத்து வீசிய கிரிகளை
எரி உக நூறி,
ஒறுத்து, மற்று அவர் தலைகளால்
சில மலை உயர்த்தான்.
229
7373. மீனுடைக் கருங்கடல் புரை
இராக்கதர் விட்ட
ஊனுடைப் படை, இராவணன்
அம்பொடும் ஓடி,
வானரக் கடல் படாவகை,
வாளியால் மாற்றி,
தானுடைச் சரத்தால் அவர்
தலை மலை தடிந்தான்.
230
அனுமானின் வேகம்
7374. இம்பரான் எனின், விசும்பினன்
ஆகும், ஓர் இமைப்பில்;
தும்பை சூடிய இராவணன்
முகம் தொறும் தோன்றும்;
வெம்பு வஞ்சகர் விழி தொறும்
திரியும்; மேல் நின்றான்
அம்பின் முன் செலும், மனத்திற்கும்
முன் செலும் அனுமன்
231
போர்க்களக் காட்சிகள் (7375-7381)
7375. ஆடுகின்றன, கவந்தமும்;
அவற்றொடும் ஆடிப்
பாடுகின்றன, அலகையும்;
நீங்கிய பனைக்கைக்
கோடு துன்றிய கரிகளும்
பரிகளும் தலைக் கொண்டு
ஓடுகின்றன, உலப்பு இல,
உதிர ஆறு உவரி.
232
7376. அற்ற ஆழிய, அறுப்புண்ட
அச்சினம், அம்போடு
இற்ற கொய் உளைப் புரவிய,
தேர்க்குலம் எல்லாம்;
ஒற்றை வாளியோடு உருண்டன,
கருங் களிற்று ஓங்கல்;
சுற்றும் வாசியும் துமிந்தன,
அமர்க்களம் தொடர்ந்த.
233
7377. தேர் இழந்து, வெஞ்சிலைகளும்
இழந்து, செந்தறுகண்
கார் இழந்து, வெம் கலின மாக்
கால்களும் இழந்து,
சூர் இழந்து வன்கவசமும்
இழந்து, துப்பு இழந்து,
தார் இழந்து, பின் இழந்தனர்
நிருதர், தம் தலைகள்.
234
7378. அரவின் நுண் இடை அரக்கியர்,
கணவர் தம் அற்ற
சிரமும் அன்னவை ஆதலின்,
வேற்றுமை தரெியார்
புரவியின் தலை பூட்கையின்
தலை இவை பொருத்திக்
கரவு இல் இன் உயிர் துறந்தனர்,
கவவுறத் தழுவி.
235
7379. ஆர்ப்பு அடங்கின, வாய் எலாம்;
அழல் கொழுந்து ஒழுகப்
பார்ப்பு அடங்கின, கண் எலாம்;
பல வகைப் படைகள்
தூர்ப்பு அடங்கின, கை எலாம்;
தூளியின் படலைப்
போர்ப்பு அடங்கின உலகு எலாம்;
முரசு எலாம் போன.
236
7380. ஒன்றும் நூற்றினோடு ஆயிரம்
கொடும் தலை, உருட்டி,
சென்று தீர்வன எனப்
பலகோடியும் சிந்தி,
நின்ற தேரொடும் இராவணன்
ஒருவனும் நிற்பக்,
கொன்று வீழ்த்தினது இராகவன்
சரம் எனும் கூற்றம்.
237
7381. தேரும் யானையும் புரவியும்
அரக்கரும் தறெ்றி,
பேரும் ஓர் இடம் இன்று
எனத் திசைதொறும் பிறங்கி,
காரும் வானமும் தொடுவன
பிணக் குவை கண்டான்,
மூரி வெஞ்சிலை இராவணன்
அரா என முனிந்தான்.
238
இராவணன் இராமன்மேல் அம்பு எய்தல் (7382-7387)
7382. முரண்தொகும் சிலை இமைப்பினில்
முறையுற வாங்கி,
புரண்டு தோள் உறப் பொலங்கொள்
நாண் வலம்படப் போக்கி,
திரண்ட வாளிகள் சேவகன்
மரகதச் சிகரத்து
இரண்டு தோளினும் இரண்டு
புக்கு அழுந்திட, எய்தான்.
239
7383. முறுவல் எய்திய முகத்தினன்,
முளரி அம் கண்ணன்,
மறு இலாதது ஓர் வடிக்கணை
தொடுத்து, உற வாங்கி,
இறுதி எய்தும் நாள், கால்பொர,
மந்தரம் இடையிட்டு
அறுவது ஆம் என, இராவணன்
சிலையினை அறுத்தான்.
240
7384. மாற்று வெஞ்சிலை வாங்கினன்,
வடிம்புடை நெடுநாண்
ஏற்று உறா முனம், இடை
அறக் கணைகளால் எய்தான்;
காற்றினும் கடிது ஆவன,
கதிர் மணி நெடுந்தேர்
ஆற்று, கொய் உளைப் புரவியின்
சிரங்களும் அறுத்தான்.
241
7385. மற்றும் வெம்படை வாங்கினன்
வழங்குறா முன்னம்,
அற்று அழிந்து உக அயில் நெடுங்
கணைகளால் அறுத்தான்;
கொற்ற வெண்குடை கொடியொடுந்
துணிபடக் குறைத்தான்;
கற்றை அம் சுடர்க் கவசமும்
கட்டு அறக் கழித்தான்
242
7386. மாற்றுத் தேர் அவண்
வந்தன வந்தன வாரா,
வீற்று வீற்று உக, வெயில்
உமிழ் கடுங்கணை விட்டான்;
சேற்றுச் செம்புனல் படுகளப்
பரப்பிடைச் செங்கண்
கூற்றும் கை எடுத்து ஆடிட,
இராவணன் கொதித்தான்.
243
7387. செறிந்த பல் மணிப் பெருவனம்
திசை பரந்து எரிய,
பொறிந்த வாய், வயக் கடுஞ் சுடர்க்
கணை படும் பொழுதின்
எறிந்த கால் பொர, மேருவின்
கொடுமுடி இடிந்து
மறிந்து வீழ்ந்ததும் ஒத்தது, அவ்
அரக்கன்தன் மகுடம்.
244
இராவணனது முடியை வீழ்த்துதல் (7388-7389)
7388. மின்னும் பல் மணி மவுலிமேல்
ஒருகணை விட்டான்;
அன்ன காய்கதிர் இரவிமேல்
பாய்ந்த போர் அனுமன்
என்னல் ஆயது ஓர் விசையினில்
சென்று, அவன் தலையில்
பொன்னின் மாமணி மகுடத்தை
வீழ்த்தது புணரி.
245
7389. அண்டர் நாயகன் அடுசிலை
உதைத்த பேர் அம்பு
கொண்டு போகப் போய்க் குரைகடல்
குளித்த அக் கொள்கை
மண்டலம் தொடர் வயங்கு
வெங்கதிரவன், தன்னை
உண்ட கோெளாடும் ஒலிகடல்
வீழ்ந்ததும் ஒக்கும்.
246
மகுடமிழந்த இராவணன் நிலை (7390-7391)
7390. சொல்லும் அத்தனை அளவையில்
மணிமுடி துறந்தான்;
எல் இமைத்து எழு மதியமும்
ஞாயிறும் இழந்த
அல்லும் ஒத்தனன்; பகலும்
ஒத்தனன்; அமர் பொருமேல்,
வெல்லும் அத்தனை அல்லது
தோற்றிலா விறலோன்.
247
7391. மாற்றருந் தட மணிமுடி
இழந்த வாள் அரக்கன்,
ஏற்றம் எவ் உலகத்தினும்
உயர்ந்துளன் எனினும்,
ஆற்றல் நல் நெடுங் கவிஞன் ஓர்
அங்கதம் ப்ப,
போற்று அரும் புகழ் இழந்த பேர்
ஒருவனும் போன்றான்.
248
இராவணன் நாணுதல்
7392. ‘அறம் கடந்தவர் செயல் இது ‘
என்று, உலகு எலாம் ஆர்ப்ப,
நிறம் கரிந்திட, நிலம் விரல்
கிளைத்திட, நின்றான்
இறங்கு கண்ணினன், எல்
அழி முகத்தினன், தலையன்,
வெறுங் கை நாற்றினன்,
விழுதுடை ஆல் அன்ன மெய்யன்
249
இராவணனை நோக்கி இராமன் சொல்லத் தொடங்குதல்
7393. நின்றவன் நிலை நோக்கிய
நெடுந்தகை, இவனைக்
கொன்றல் என்? தனி வெறும் கை
நின்றான் ‘எனக் கொள்ளா,
‘இன்று அவிந்தது போலும்,
உன் தீமை ‘என்று இசையோடு
ஒன்ற வந்தன வாசகம்,
இனையன த்தான்;
250
இராமன் அறிவுரை (7394-7398)
7394. “அறத்தினால் அன்றி அமரர்க்கும்
அருஞ்சமம் கடத்தல்
மறத்தினால் அரிது ‘‘ என்பது
மனத்திடை வலித்தி;
பறத்தி, நின் நெடும்பதி புக;
கிளையொடும், பாவி!
இறத்தி; யான் அது நினைகிலென்
தனிமை கண்டு இரங்கி.
251
7395. ‘உடைப் பெருங் குலத்தினரொடும்
உறவொடும்; உதவும்
படைக்கலங்களும், மற்று நீ
தேடிய பலவும்,
அடைத்து வைத்தன திறந்து கொண்டு,
ஆற்றுதி ஆயின்,
கிடைத்தி; அல்லையேல், ஒளித்தியால்;
சிறுதொழில் கீழோய்!
252
7396. சிறையில் வைத்தவள் தன்னை
விட்டு உலகினில் தேவர்
முறையில் வைத்த நின் தம்பியை
இராக்கதர் முதல் பேர்
இறையில் வைத்து அவற்கு
ஏவல் செய்து இருத்தியேல், இன்னும்
தரையில் வைக்கிலென், நின் தலை
வாளியின் தடிந்து.
253
7397. ‘அல்லையாம் எனின், ஆர் அமர்
ஏற்று நின்று ஆற்ற
வல்லையாம் எனின், உனக்குள
வலி எலாம் கொண்டு,
“நில், ஐயா! “ என நேர் நின்று
பொன்றுதி; எனினும்,
நல்லை ஆகுதி; “பிழைப்பு இனி
உண்டு “ என நயவேல்.
254
7398. ‘ஆள் ஐயா! உனக்கு அமைந்தன
மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை;
இன்று போய், போர்க்கு
நாளை வா ‘என நல்கினன்
நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல
நாடுடை வள்ளல்.
255